Breaking

LightBlog

Saturday, 3 December 2016

குழந்தைகளுக்கு ஏன் கதைகளை சொல்லவேண்டும்....


டிவி, கம்ப்யூட்டர், செல்போன் போன்ற மீடியாக்களின் தாக்கம் அதிகம் உள்ள இன்றைய கால கட்டத்தில், பெற்றோருடன் பேசுவது / அல்லது குழந்தையோடு பெற்றோர் பேசுவது என்பதே குறைந்து வருகிறது. கதை சொல்வதன் மூலம், பெற்றோர் தன் குழந்தைப் பருவத்தை பற்றி பகிரவும், அதை அறிந்து, குழந்தையும் தன் குழந்தைப் பருவத்து தருணங்களை நினைத்து பெருமை கொள்ளக் கூடும். 

குழந்தைகளுக்கு நல்ல கதைகள் சொல்வதன் மூலம், வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல், நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி ஜெயிப்பது போன்ற நல்ல குணங்களை அவர்களின் மனதில் எளிதாக விதைக்க முடியும். 

குழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் உண்டாகிறது.

பழங்காலத்து கதைகள் மூலம் நம் தமிழ் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கலாம்.

கற்பனை சக்தியை தூண்டும் கதைகள் சொல்லும் போது, அவற்றை கேட்டு வளரும் உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை கையாள்பவர்களாக இருக்கிறார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உங்கள் குழந்தை மனம் துவண்டு, தோல்வி அடைந்து இருக்கும் சூழ்நிலையில், ஒரு பெற்றோராக நீங்கள் கூறும் அறிவுரைகளை விட, அந்த சூழலுக்குஏற்ற ஒரு நல்ல கதை அவர்கள் மனதை உற்சாகப் படுத்தும். தாய் -தந்தை / தாத்தா பாட்டியும் இதே மாதிரி ஒரு நிலையை எதிர்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு / நம்பி, ஊக்கம் அடைவார்கள். 

கதை சொல்லும் போது வெறுமனே உணர்வின்றி சொல்லாமல், தகுந்த குரல் மாற்றங்கள், முக பாவங்கள், மற்றும் செய்கை / நடிப்பு என்று சொன்னால், குழந்தைகள் இன்னும் ஆர்வமாக கேட்பார்கள்.

குழந்தைக்கு இரவு நேரங்களில் இனிமையான கதைகளை சொல்வதனால், அவர்கள் இனிமையான கனவுகள் கொண்டு தூங்குவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் இதனால் இரவு ஆழ்ந்த உறக்கமும், பாதுகாப்பு உணர்வும் பெறுவதாகவும் தெரிவிக்கிறார்கள். 

அதே போல் குழந்தைகளையும் உங்களுக்கு கதை சொல்லச் சொல்லி, பொறுமையாய் கேளுங்கள். இதனால் குழந்தைகளுக்கு மற்றவர் முன் பேசுவதற்கான திறன் கூடும். தன்னம்பிக்கை வளரும்.

குழந்தைகளையே கற்பனை செய்து கதை சொல்லத் தூண்டுவதன் மூலம், கற்பனை சக்தி வளருவது மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அதன் மூலம் வெளிக் கொண்டுவர வழி வகுக்கும்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog